கர்நாடக வனத்துறையினர் தமிழர்கள் 3 பேரை அநியாயமாக சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
Published : Aug 16, 2026 05:31:25 PM - 4 weeks ago
கர்நாடக வனத்துறையினர் தமிழர்கள் 3 பேரை அநியாயமாக சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
கர்நாடக வனத்துறையினர் தமிழர்கள் 3 பேரை அநியாயமாக சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். '3 பேர் கொலையில் குற்றமிழைத்தவர்களை காப்பாற்றும் முயற்சிகளில் கர்நாடக வனத்துறை ஈடுபடுகிறது' என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; "கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் மூவரை அம்மாநில வனத்துறையினர் அநியாயமான முறையில் சுட்டுக் கொன்றிருக்கும் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. மனித உயிர்கள் குறித்த எந்த மதிப்பும் இல்லாமல் நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்தக் கொடூரச் செயல் கடும் கண்டனத்துக்குரியது.
குற்றமிழைத்தவர்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் கர்நாடக வனத்துறையினர் ஈடுபடுவதாகத் தெரிகிறது. அது தவிர்க்கப்பட்டு, இதனைக் கொலை வழக்காகப் பதிந்து, வெளிப்படைத்தன்மை மிக்க, பாரபட்சமற்ற நீதி விசாரணை நடைபெற்று இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இனி இப்படி ஒரு குற்றத்தில் ஈடுபடும் துணிச்சல் எவருக்கும் வராது.
மேகதாது விவகாரம் போல இதிலும் வாய்மூடி இருக்காமல், இச்சம்பவத்தில் தமிழ்நாடு அரசு கர்நாடக அரசுக்குத் தனது கண்டனத்தைப் பதிவுசெய்திட வேண்டும்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தருவதோடு, அவர்களுக்கு அரசுப் பணியும் கிடைக்கச் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
