நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முதல்வர் விஜய் ஆலோசிக்கவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது
Published : Aug 06, 2026 11:19:50 PM - a month ago
தொகுதி மறுசீரமைப்பு குறித்து வரும் 8-ம் தேதி தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முதல்வர் விஜய் ஆலோசிக்கவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒன்றிய அரசு மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு பணிகள் குறித்து தமிழக முதல்வர் விஜய் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கலந்தாலோசனைக் கூட்டத்தை தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
ஒன்றிய அரசு, தொகுதிகளை மறுவரையறை செய்ய உத்தேசித்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், முதல்வர் விஜய் தலைமையில், ஒன்றிய அரசால் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள தொகுதி மறுவரையறைப் பணிகள் மற்றும் அதனால் தமிழகத்துக்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து, தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் (மக்களவை மற்றும் மாநிலங்களவை) கலந்தாய்வுக் கூட்டம் ஆக.8 (சனிக்கிழமை) அன்று பிற்பகல் 3.00 மணிக்கு, சென்னை, சேப்பாக்கம், கலைவாணர் அரங்கத்தின் கூட்டரங்கில் (3-ஆம் தளம்) நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்துக்கான அழைப்பிதழ் புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் மூலம் தமிழகத்தை சேர்ந்த அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
